ஆடு கோழி விலை உயர்வு ஓர் அலசல்

கடந்த இரண்டு வருடங்களாகவே ஆடு மற்றும் கோழி விலை மற்றும் அதன் கறி விலை சற்று வேகமாக உயர்ந்து வருகிறது. வணிகவியல் பேராசிரியர் என்ற முறையில் இதை இரண்டு கோணங்களில் நான் பார்க்கிறேன். ஒன்று இதன் தேவை அதிகமாகிவிட்டது. இரண்டு வளர்ப்பு குறைந்து வருகிறது. இன்று மக்களின் உணவில் அசைவம் என்பது தவிர்க்க முடியாத இடத்தில இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் முன்பு வரை மக்கள் கோவிலுக்கு அதிகமாக போகவில்லை என்றாலும், நாள் கிழமை பக்தி என்று வாழ்ந்துவந்தனர். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, அமாவசை, கிருத்திகை என்று கடைப்பிடித்து அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். அந்த நாட்களில் அசைவ உணவினை உட்கொண்டால் பெரிய தெய்வ குற்றம் நடந்து விடும் என்ற பயமும் பக்தியும் இருந்தது.


இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வாழ்க்கைமுறை மற்றும் மேற்கத்திய கலாச்சார மோகம் என்பது அதீத அளவில் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை மாற்றியுள்ளது. ஆடு, மாடு, கோழி போன்றவை குடும்பத்தில் ஒரு நபராகப் பார்க்கப்பட்ட காலம் போய் அவை உணவாகவும் பணமாகும் பொருளாகவும் பார்க்கும் மனநிலையில் உள்ளது. முற்காலங்களில் விவசாயமே தமிழ் நாட்டில் முதன்மை தொழிலாக இருந்தது.

திருவிழாக்கள் மற்றும் கோடைகாலங்களில் அசைவ விருந்துகள் உறவுகளின் வரவுகளால் நடத்தப்படும். இன்றோ நாள்தோரும் ஏதாவது வகையில் அசைவம் உண்பது வாடிக்கை ஆகிவிட்டது. சாலையோர கடைகள், பிரத்தியேக பிரியாணி கடைகள், கட்டண விருந்து வைக்கும் உணவகங்கள் போன்றவற்றின் விளம்பரங்கள் மக்கள் மனதில் அசைவ உணவை தினமும் நாடிப்போகும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற செயல்களே கறி விலையேற்றத்திற்கு காரணமாக அமைகிறது என்பது முதல் கருத்துக்கான விளக்கம்.

இரண்டாவது கோணம் தான்  மிகவும் சரியானதாக அமையும் என்பதை விளக்குகிறேன். விவசாயிகள் தங்கள் தோட்டங்களிலும் காடுகளிலும் ஆடுகள் மற்றும் கோழிகளை பொதுவாக வளர்த்து வந்தனர். விவசாயம் என்பது உணவு உற்பத்தியாக பார்க்கப்பட்டதே தவிர ஒரு வியாபாரமாக பார்க்கப்படவில்லை. எனவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் உறவோடும் உதவும் மனதோடும் இருந்தனர். ஆடு கோழிகளை  அடுத்தவர் வளர்க்கும் கால்நடை மற்றும் பறவையைக்கூட தங்களுடையதாக பேணிக்காத்தனர்.

வேலிபோடாத நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், வாய்க்கால் கரை, குளக்கரை போன்ற பசுமை நிறைந்த இடங்கள் இருந்தன. கிடை ஆடுகள் மற்றும் மாடு மேய்க்கும் தொழில் செய்தவர்கள் அதிகமாக இருந்தனர். Software நிறுவனங்கள் நமது மண்ணில் கால் பதித்தவுடன் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றம் வரத்தொடங்கியது. விளைநிலங்களின் விலை விண்முட்டத்தொடங்கியது. பல தொழிற்சாலைகள் உருவாக்கபட்டன.

மாட்டுவண்டிகளும் உழவுமாடுகளும் மாற்றப்பட்டன. டிராக்டர்களும், Truck களும் பயன்படுத்தப்பட்டன. உயிர் வேலிகள் எனும் மரம், செடிகள் அழிக்கப்பட்டு நிலங்கள் கம்பி வேலிகளால் கட்டுண்டு போயின. பணம் மட்டுமே முதன்மையாக பார்க்கப்பட்டதால் உறவுகள் முடிந்துபோனது. போட்டி மற்றும் பொறாமை எண்ணங்கள் ஓங்கி உயர்ந்தது. அடுத்தவீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் வேலிதாண்டினால் கொல்லப்பட்டன.

மேய்ச்சல் நிலங்கள் கட்டிடம் கட்டும் நிலமாக மாற்றப்பட்டன. குளங்களும் வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. அனைத்து இடங்களும் சிறிது சிறிதாக கம்பி வேலிகளாக மாற்றமாயின. மேய்ச்சல் தொழிலை முதன்மையாக கொண்டவர்கள் தங்கள் செய்து வந்த தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு தொழிற்சாலை நோக்கி வேலைதேட வேண்டியதாகியது. கோழி மற்றும் ஆடு வளர்த்த விவசாயிகளும் பக்கத்துக்கு நிலத்தில் அவை கால் வைத்தால் காலியாகிவிடும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு தேவையானவற்றை மட்டும் வளர்க்க ஆரம்பித்தனர்.


இதன் விளைவே இன்று கடுமையான விலையேற்றத்தில் உள்ளது கறி. வியாபார நோக்கில் ஆடு மற்றும் கோழி பண்ணைகள் இருந்தாலும் அவை தரமானதா என்பது பலரின் எண்ணத்தில் இன்று உதித்துள்ளது. இந்தக் கோணத்தில் பார்த்தால், தேவை மட்டுமே அதிகமாகி வருவதால் கூடிய விரைவில் கறிவிலை ஆயிரங்களைத் தாண்டிவிடும். இன்றைய இளைஞர்கள் சிலர் பழைமையை மீட்டெடுக்க போராடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு தோள் கொடுத்து நின்றால் நமது ஜல்லிக்கட்டை மீட்டது போல் இந்த விலையேற்றத்தையும் மீட்கமுடியும்.

சிந்திப்போம்

முனைவர்.சி. நஞ்சப்பா 
இயற்கை வேளாண் உழவர் 

Comments

  1. பசிக்கு சாப்பிட்டது போய் ருசிக்கு சாப்பிடத் தொடஙியதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.
    பதிவு மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்